கனடாவின் எட்மன்டன் நகரில் கடந்த 2024ஆம் ஆண்டு 11 வயது சிறுவனைக் கடித்துக் கொன்ற இரு நாய்களின் உரிமையாளரான கிறிஸ்டல் மெக்டொனால்ட் என்பவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் வீட்டுக்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கட்டுப்பாடற்ற அலட்சியத்தால் உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக கடந்த மே மாதம் இவர் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டார்.
குறித்த நபருக்கு 2 ஆண்டுகள் வீட்டுக்காவல், 200 மணிநேரச் சமூக சேவை மற்றும் வாழ்நாள் முழுவதும் நாய் வளர்க்கத் தடை என்ற அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 2024 இல், பிரிட்டிஷ் கொலம்பிய பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. கழுத்துப் பகுதியில் நாய்கள் பலமாகக் கடித்ததால் சிறுவன் உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
தாக்குதல் நடத்திய இரு ‘கேன் கோர்சோ’ ரக நாய்களும் பின்னர் தயவுக்கொலை செய்யப்பட்டன.
இந்தச் சம்பவத்திற்கு முன்னரே, அந்த இரு நாய்களும் வேறு இரண்டு செல்லப் பிராணிகளைக் கொன்றதுடன், மெக்டொனால்ட் உட்பட மூன்று பெரியவர்களைக் கடித்துக் காயப்படுத்தியிருந்தன என்பதும் விசாரணையில் அம்பலமானது.
அரசுத் தரப்பில் மெக்டொனால்டுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை கோரப்பட்டது. ஆனால், பிரதிவாதி தரப்பில் மெக்டொனால்டின் பழங்குடியின பின்னணி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் அவரது சிறுவயது பாதிப்புகள், இனவெறி பாகுபாடுகள் மற்றும் அவற்றுக்கு மத்தியிலும் அவர் தெரிவிக்கும் ஆழ்ந்த மனவருத்தம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி குறைந்தபட்ச தண்டனை கோரப்பட்டது.
தற்போது பி.சி-யில் உள்ள பென்டிக்டன் பகுதியில் வசித்து வரும் மெக்டொனால்டு, தன் மீதான குற்றச்சாட்டை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
