வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.
சூடானில் கடந்த 2021ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின் துணைத்தலைவராக துணை இராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை இராணுவத்துடன் இணைக்க இராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படையின் அதிவிரைவு ஆதரவு படையினர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால், இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி முதல் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. துணை இராணுவம் கட்டுப்பாட்டில் இருந்த தலைநகர் கார்டூமினை கடந்த மார்ச் மாதம் இராணுவம் கைப்பற்றியது.
அதேவேளை, இராணுவத்திற்கும், துணை இராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. அதேபோல், ஆயுதக்குழுக்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், சூடானின் தெற்கு கார்டோபன் மாகாணம் குவார்டாட், அபு ஹமாமா ஆகிய கிராமங்களுக்குள் புகுந்து ஆயுதக்குழுவினர் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர். துணை இராணுவத்தின் ஆதரவு பெற்ற சூடான் மக்கள் விடுதலை இயக்கம் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு நடத்திய இந்த தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
