இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங்குக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் பன்முகத் தொடர்புகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவும் வரலாற்று ரீதியான, கலாசார மற்றும் மக்கள் இடையேயான தொடர்புகளைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான, பயனுள்ள மற்றும் தொடர்ச்சியான உறவைப் பேணுவதன் அவசியத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவ வேண்டிய அமைதி, பாதுகாப்பு, நிலையான தன்மை மற்றும் மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய அபிவிருத்தி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாகவும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பரஸ்பர மரியாதை, இறையாண்மை, சமத்துவம், நம்பிக்கை மற்றும் புரிதல் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கக்கூடிய உறவைப் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார்.
மேலும், அனைத்து மட்டங்களிலும் தொடர்ச்சியான உறவுகளைப் பேணுவதன் மூலம் இரு நாட்டு மக்களுக்கிடையேயான நட்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
