பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளை வலுப்படுத்தும் நோக்கில் மாலைத்தீவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் முக்கிய நிகழ்வாக, மாலைத்தீவு அதிபர் டாக்டர் முகமது முயிஸூவை இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இன்று காலை 9.00 மணியளவில் மாலே குடியரசுச் சதுக்கத்தில் பிரதமருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதிபர் முயிஸூ மற்றும் பிரதமர் அன்வார் இடையே தனிப்பட்ட முறையில் உயர்மட்டச் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதுடன், பிராந்திய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொதுவான விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
“மலேசியா மற்றும் மாலத்தீவு இடையே பாதுகாப்பு மற்றும் சமய விவகாரங்கள் (Islamic Affairs) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) இரு தலைவர்களின் முன்னிலையில் கையெழுத்தாகவுள்ளன
மேலும் மாலைத்தீவு குடியரசுத் துணைத் தலைவர்,சபாநாயகர் மற்றும் மாலைத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோரையும் பிரதமர் அன்வர் நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
1968இல் தொடங்கப்பட்ட மலேசியா-மாலைத்தீவு இராஜதந்திர உறவு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.
2025ஆம் ஆண்டில் தெற்காசியாவில் மலேசியாவின் 6-வது மிகப்பெரிய வர்த்தகக் பங்காளியாக மாலைத்தீவு திகழ்ந்தது. இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பு RM792 மில்லியன் ஆகும். இதில் மலேசியாவின் ஏற்றுமதி மட்டும் RM786.2 மில்லியனை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.தமது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பிரதமர் அன்வார் நாளை பிற்பகல் மலேசியா திரும்புகிறார்.
