Sunday, September 22, 2024
Homeநிலச்சரிவில் தப்பிய மூதாட்டியை பாதுகாத்த யானைகள்..!

நிலச்சரிவில் தப்பிய மூதாட்டியை பாதுகாத்த யானைகள்..!

வயநாடு நிலச்சரிவின் போது வீட்டை விட்டு தனது கணவர், பேரன் பேத்திகளுடன் வெளியேறி நடுக்காட்டுக்குள் யானைக் கூட்டத்துடன் மாட்டிக்கொண்ட முதாட்டி தொடர்பான சுவாரஸ்ய நிகழ்வை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

“திங்கட்கிழமை இரவு பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் எனக்கு அதிகாலை 1.15 மணிக்கு முழிப்பு வந்தது. அப்போது ஒரு பெரிய சத்தம் கேட்டது. எங்கள் வீட்டிற்குள் திடீரென தண்ணீர் புகுந்தது. நாங்கள் அனைவரும் கட்டில் மீது ஏறி அமர்ந்தோம். ஆனால், அடுத்த நிமிடமே பெரிய மரக்கட்டைகள் எங்கள் வீட்டின் மீது முட்டி மோதியது” என தனது அனுபவத்தை கேரள மாநிலம் முண்டக்கை பகுதியைச் சேர்ந்த சுஜாதா சொல்லத் தொடங்குகிறார்.

ஆனால், அதற்கு முன்னதாகவே இந்த பதட்டத்தை உணர்ந்தது கேரளத்தின் வயநாடு பகுதியில் உள்ள சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள். கடந்த திங்கள்கிழமை, அதாவது ஜூலை 29ஆம் திகதி இரவுதான், அடுத்த நாள் தாம் சந்திக்க உள்ள இன்னலை அறியாமல் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர், சிலர் தூங்க தயாராகிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தொடங்கிய கனமழையில் திடீரென பெரிய இடி விழுந்த சத்தமும் கேட்டது. ஆனால், அது இடி அல்ல. அவை பாறைகள்.

என்ன இது பாறைகள் அடித்து வரப்படுகிறதே? என எண்ணிப் பார்ப்பதற்குள் கண்ணீரில் ஆழ்த்தியது பெருவெள்ளமும், நிலச்சரிவும். இதில், சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் 30 கி.மீ அப்பால் உள்ள நிலம்பூர் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டது இந்த நிலச்சரிவின் கோர முகத்தைக் காட்டுவதை நம்மால் அறிய முடிகிறது. ஆனால், இதனிடையே தனது மகள் சுஜிதா, கணவர் குட்டன், பேரன் சூரஜ் (18) மற்றும் பேத்தி மிருதுளா (12) ஆகியோருடன் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் சுஜாதா.

அது மட்டுமல்லாமல், இடிபாடுகளில் இருந்து பேத்தி கதறி அழுததைச் சமாளித்து அவளது கையை பிடித்துக்கொண்டு குடும்பத்தில் உள்ள மற்ற மூவரும் வெளியேறி, பாய்ந்தோடும் நீரை கடந்து மலைக்குச் சென்றதாக தனது அனுபவத்தை ஊடகங்களின் வாயிலாக பகிர்ந்தார் சுஜாதா.

“அப்போது பலத்த மழை பெய்தது. மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு காடே இருளாக காணப்பட்டது. நாங்கள் நிற்கும் இடத்திற்கு அருகே தூரத்தில் ஒரு காட்டு யானை கூட்டம் இருந்தது. அந்த கூட்டம் எங்களை பார்த்தது. அதில் கொம்பன் (ஆண் யானையும்) நின்றிருந்தது. பார்க்கவே பயமாக இருந்தது” என இயற்கைப் பேரிடரில் இருந்து தப்பிப்பதற்காக யானையிடம் மாட்டிக் கொண்டோமோ என்ற நினைப்பை நம்முள் வட்டமிட வைத்தார் சுஜாதா.

ஆனால், “பொதுவாக யானைகள் பார்ப்பதற்கு மிகப்பெரிய உருவமாக இருந்தாலும் மிகவும் சாதுவானது. அதனை துன்புறுத்தாத வரை அது மனிதருக்கு துன்பத்தை ஏற்படுத்துவதில்லை” என்கிறார் கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் முருகானந்தம். இவர் கூறியது போலவே அந்த யானைக் கூட்டமும் விடிந்து சுஜாதாவின் குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்கள் வரும்வரை காத்திருந்துச் சென்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை என்கிறார் கடவுளிடம் பிரார்த்தனை செய்த சுஜாதா.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நான் யானையிடம் ஒரு வேண்டுகோளை முணுமுணுத்தேன். நான் ஒரு பேரழிவில் இருந்து தப்பித்துவிட்டோம். யாராவது வந்து எங்களை மீட்கும் வரை எங்களை ஒன்றும் செய்து விடாதே. எங்களை இங்கே இருக்க அனுமதிக்கும்படி அதைக் கேட்டேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது போல் தோன்றியது.

நாங்கள் காலை 6 மணி வரை அங்கேயே இருந்தோம். காலையில் சிலர் எங்களை மீட்கும் வரை யானைகளும் அங்கேயே நின்றன. விடிந்ததும் அதன் கண்கள் துளிர்விடுவதைப் பார்த்தேன். அந்த தருணம் சொல்ல முடியாத அனுபவம்” எனக் கூறும்போதே நம் உடல் மெய்சிலிர்த்து புல்லரிக்கச் செய்கிறது. அதையே, அந்த யானைகளால் தான் நாங்கள் மறு பிறவி பெற்றுள்ளோம் என தங்களது உணர்வுகளாக கொட்டியுள்ளார் சுஜாதா.

மேலும், இதேபோன்று சுனாமி ஏற்பட்ட போதிலும் தாய்லாந்தில் பலரை யானைகள் காப்பாற்றியதாக செய்திகள் வந்தது. அதே போன்று தான் இதையும் பார்க்க வேண்டி உள்ளது. யாராவது ஆபத்தில் இருந்தால் அவர்களை காப்பாற்றவும் யானைகள் முயற்சி செய்யும், மிகவும் சாதுவான யானைகளை கொடுமைப்படுத்தினாலோ அல்லது அதற்கு துன்பம் கொடுத்தாலோ, அதன் குணம் மாறி மனிதர்களை தாக்குகிறது. எனவே இந்த பேருயிரை பாதுகாக்க அனைவரும் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என யானையின் குணாதிசியங்களை மனிதர்கள் புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்கிறார் முருகானந்தம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments