யாழில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர் நெஞ்சுவலி ஏற்பட்டு, வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த சேகுலாப்தீன் முஹமட் காபில் (வயது 40) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் நேற்று முன்தினம் (17) காலை நாகர்கோவில் பகுதியில் இருந்து கடல் தொழிலுக்காக சென்றுள்ளார். கடற்கரையிலிருந்து 24 கிலோமீட்டர் தூரம் சென்று நூறு அடி ஆழத்தில், ஒட்சிசன் சிலிண்டர் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் 11 மணியளவில் தண்ணீருக்கு மேலே வந்துள்ளார். பின்னர் பிற்பகல் இரண்டு மணியளவில் மந்திகை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், பிற்பகல் 5 மணி அளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இருப்பினும் குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.