இலங்கையின் வடக்கே கச்சதீவில் இருந்து சுமார் 08 கடல் மைல் தொலைவில் இந்திய படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் கடலில் சிக்கிய 02 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (27 ) மீட்டுள்ளனர்.
கச்சதீவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் நேற்றுக் காலை நீந்திக் கரைக்கு வந்த ஒருவரை அவதானித்து விசாரித்ததில் அவர் இந்தியர் எனவும் நான்கு மீனவர்களுடன் வந்த தமது மீன்பிடிக் படகு, கடல் சீற்றத்தால் கவிழ்ந்ததாகவும் தான் நீந்தி கச்சதீவில் கரை ஒதுங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விரைவாக செயற்பட்ட கடற்படையினர், கச்சதீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களை தேடுதல் மற்றும் மீட்புப் பணியை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின்போது, கடற்படையினர் மற்றொரு இந்திய மீனவரை நீர் புதைகுழியில் இருந்து வெற்றிகரமாக மீட்டனர்.
கடற்படையினரால் மீட்கப்பட்ட இரு மீனவர்களும் நலமுடன் இருப்பதாகவும் அவர்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கச்சதீவு கடற்பகுதியில் கடல் நிலைமை சவாலான போதிலும் எஞ்சிய இரு இந்திய மீனவர்களை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளது.