தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை எதிர்வரும் சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் தரப்பினர் விடுவிக்காவிட்டால் போர் நிறுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இதன்படி, ஹமாஸூக்கு எதிராகத் தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறு அறிவித்தல் கிடைக்கும் வரை பணயக் கைதிகளை விடுவிக்கும் செயற்பாட்டை ஒத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ள நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் தமது எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஹமாஸ் தரப்பினரால் 76 பணயக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இஸ்ரேல் பிரதமர் குறித்த 76 பணயக் கைதிகளையும் விடுவிக்குமாறு கோருகின்றாரா? அல்லது அடுத்த கட்டமாக விடுவிக்கப்பட வேண்டிய மூவரை மாத்திரம் கோருகின்றாரா? என்பது அறிவிக்கப்படவில்லை.
இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர், சகல பணயக் கைதிகளையும் விடுவிக்குமாறு கோரப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.