கணேமுல்ல சஞ்ஜீவ கொலை தொடர்பாக மேலும் 3 சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.
திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக, வெளிநாட்டில் மறைந்திருந்து இந்தக் குற்றத்திற்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படும் திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கமாண்டோ சலிந்தவுடன், கமாண்டோ சமிந்து வட்ஸ்அப் மூலம் பல செய்திகளைப் பரிமாறிக்கொண்டமை தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபரான கமாண்டோ சமிந்து, ‘நான் வந்துவிட்டேன்’ என்று கமாண்டோ சலிந்தவுக்கு வட்ஸ்அப் செய்தி ஊடாக அறியப்படுத்தியுள்ளார்.
அத்துடன், ‘காவல்துறையும் விசேட படையினரும் இங்கே இருக்கிறார்கள்’ என கமாண்டோ சலிந்தவுக்கு அவர் மற்றுமொரு செய்தியை அனுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக, ‘பிரச்சினை இல்லை, சுடுங்கள்’ என சாலிந்த ஒரு செய்தியை அனுப்பியிருந்தார்.
அதேநேரம், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கடுவலையிலிருந்து கொலைக்காகப் புதுக்கடை நீதிமன்றத்திற்கு வந்த நேரத்திற்கும், கொலைக்குப் பின்னர் புத்தளம் பாலாவி பகுதியில் அவர் கைது செய்யப்பட்ட நேரத்திற்கும் இடையில், வாட்ஸ்அப் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையே சுமார் 100 தொலைபேசி அழைப்புகள் பரிமாற்றப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைக்குப் பின்னர் இருவருக்கும் இடையே வாட்ஸ்அப் மூலம் நீண்ட காணொளி உரையாடலும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட அதுருகிரிய காவல்துறையின் கான்ஸ்டபிள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கடுவலையிலிருந்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவந்த சாரதி ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டு துப்பாக்கிதாரி மற்றும் வேனின் சாரதியை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதியளித்துள்ளதாகப் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்று தெரிவித்தார்.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவவை பூசா சிறைச்சாலையிலிருந்து கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.