சர்வதேச கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த வீரர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
2003 ஆம் ஆண்டு தனது 18 வயதில் சர்வதேச போட்டியில் அறிமுகமான ரொனால்டோ, 2025-இல் தனது 40 வயதிலும் அதே உத்வேகத்தில் விளையாடிவருகின்றார்.
போர்த்துக்கல் நாட்டின் பெயரைக் கால்பந்து உலகில் அனைவரையும் உச்சரிக்க வைத்த ரொனால்டோ, நடப்பு UEFA நேஷன்ஸ் லீக் தொடரில் தனது தேசிய அணிக்கு இரண்டாவது கிண்ணத்தை வென்று கொடுக்கும் முனைப்பில் தீவிரமாக விளையாடி வருகிறார்.
இந்தநிலையில், UEFA நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிச் சுற்றில் டென்மார்க் அணியை ரொனால்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி வீழ்த்தி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
மேலும் ரொனால்டோ இந்த வெற்றியின் மூலம் சர்வதேச போட்டிகளில் தனது 132ஆவது வெற்றியைப் பதிவுசெய்து, உலக அளவில் அதிக சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
குறித்த தொடரில் போர்த்துக்கல் அணி அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.