கனேடிய பொதுத் தேர்தலில் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
எனினும், அந்த கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை இன்னும் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க் கார்னியின் லிபரல் கட்சி 168 இடங்களில் முன்னிலை வகிக்கிறது எனினும், பெரும்பான்மைக்கு 172 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
எவ்வாறாயினும், வாக்கெண்ணும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் அந்த கட்சி பெரும்பான்மையைப் பெறுமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் 2015 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ உள்நாட்டு அரசியல் பிரச்சினை, அமெரிக்க ஜனாதிபதியின் வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஜனவரி மாதம் தமது பதவியிலிருந்து விலகியிருந்தார்.
இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் டொனால்ட் ட்ரம்பின் வரி தீர்மானம் மற்றும் அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக கனடாவை இணைக்க வேண்டும் என்ற அவரது தீர்மானம் என்பவற்றுக்கு எதிராக மார்க் கார்னி வலுவான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார்.
அதன்விளைவாக, எதிர்பார்த்ததை விடவும் லிபரல் கட்சி வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.