Tuesday, May 27, 2025
HomeMain NewsMiddle Eastகாசாவில்பசியில் வாடும் 50 லட்சம் மக்கள் - ஐ.நா. எச்சரிக்கை

காசாவில்பசியில் வாடும் 50 லட்சம் மக்கள் – ஐ.நா. எச்சரிக்கை

போரினால் பாதிக்கப்பட்ட காசாவுக்குள் கடந்த 10 வாரங்களாக உணவு, மருந்து மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து உதவி விநியோகங்களும் இஸ்ரேலால் நிறுத்தப்பட்டுள்ளன.

ஐ.நா மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன கூட்டமைப்பான ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு அமைப்பு (IPC) அதன் சமீபத்திய அறிக்கையில், காசாவில் உணவுப் பாதுகாப்பு நிலைமை அக்டோபர் 2024 இல் அதன் கடைசி மதிப்பீட்டிலிருந்து கணிசமாக மோசமடைந்துள்ளதாகவும், அங்கு வாழும் பாலஸ்தீனியர்கள் பஞ்சத்தின் கடுமையான அபாயத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

மக்கள் உயிர்வாழ்வதற்கான அத்தியாவசியப் பொருட்கள் ஏற்கனவே பெரும்பாலான இடங்களில் தீர்ந்து போயுள்ளன. சில இடங்களில், வரும் வாரங்களில் அது முடிந்துவிடும். அனைத்து மக்களும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர். காசாவில் 50 லட்சம் மக்கள், அதாவது ஐந்தில் ஒருவர் கடுமையான பசியை எதிர்கொள்கிறார்கள் என்று IPC அறிக்கை கண்டறிந்துள்ளது.

ஐநாவின் உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரிக் பெப்பர்கார்ன், மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தப் பஞ்சம், உணவு கிடைக்காத ஒரு முழு தலைமுறை குழந்தைகளையும் என்றென்றும் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்.

காசாவில் உள்ள உதவிப் பணியாளர்கள், சமீபத்திய நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், கிடங்குகள் காலியாக இருப்பதாகவும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் மனிதாபிமானக் குழுக்கள் இரண்டு நோயாளிகளுக்கு இடையே ஒரு ரேஷனைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்கு காசாவில் உள்ள யுனிசெஃப் செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கிரிக்ஸ் பேசுகையில், ‘போர் நிறுத்த காலத்தில் நாங்கள் கொண்டு வந்த மருத்துவ உபகரணங்களின் அளவு மிகக் குறைவு. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 11,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நாங்கள் சிகிச்சை அளித்துள்ளோம். வரவிருக்கும் வாரங்களில், அதிகமான குழந்தைகள் இறப்பதைக் காண்போம் என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்று கூறினார்.

காசா பஞ்சத்தின் உடனடி ஆபத்தை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பும் எச்சரித்துள்ளது.

மீதமுள்ள 59 பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு அழுத்தம் கொடுப்பதே இந்த முற்றுகையின் நோக்கம் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதற்கிடையில், இஸ்ரேலிய இராணுவம் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவ வளாகத்தின் மீது குண்டுவீசித் தாக்கியது. இதில் பத்திரிகையாளர் ஹசன் இஸ்லா உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் காயமடைந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments