பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2023ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம், 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்த நிலையில், தங்கள் தந்தைக்கு மரண ஆபத்து இருப்பதாகவும், அவரைக் காப்பாற்றுமாறும் இம்ரான் கானின் மகன்கள் இருவரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலண்டனில் வசிக்கும், இம்ரானின் மகன்களான சுலைமான் கான் மற்றும் காசிம் ஆகியோர், ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசும்போது, தங்கள் தந்தையை விடுவிக்க டிரம்பிடம் கேட்போம் என்றனர்.
பாகிஸ்தான் சிறையில் தங்கள் தந்தை குறைந்தபட்ச உரிமைகள் கூட இல்லமால் இருப்பதாக அவர்கள் இதன்போது குற்றம்சாட்டினர்.
மேலும், இம்ரான் கான் சிறைச் சூழல் குறித்து பேசிய அவர்கள், “அவர் ஒரு மரண அறையில் இருக்கிறார். வெளிச்சம் இல்லை, வழக்கறிஞர் இல்லை, மருத்துவர் இல்லை, இருப்பினும் அவர் உடைந்து போகவில்லை” என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசுகையில், “அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஆராய்ந்தால், அவை அரசியல் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகும். ஜனநாயகத்தையும் பேச்சு சுதந்திரத்தையும் ஆதரிக்கும் எந்தவோர் அரசாங்கமும் எங்கள் தந்தையை விடுவிக்க ஆதரிக்கும். குறிப்பாக, உலகின் மிகவும் பிரபலமான தலைவரான டிரம்ப்பின் உதவியை நாம் நாடுவோம்” என்றும் கூறினர்.