நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், புதிய காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் மேலும் பல பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஹமாஸ் முன்மொழிந்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியில் பாரிய தாக்குதலொன்றை ஆரம்பித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் புதிய பேச்சுவார்த்தை தொடங்கியது.
60 நாட்கள் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேல் – பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக ஒன்பது பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டதாகப் பாலஸ்தீன அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
புதிய முன்மொழியப்பட்ட ஒப்பந்தம், நாளொன்றில் உதவி பொருட்கள் அடங்கிய 400 பாரவூர்திகள் காசாவுக்குள் நுழையவும், காசாவிலிருந்து நோயாளர்களை வெளியேற்றவும் அனுமதிக்கும் என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இஸ்ரேல், மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகள் பற்றிய விரிவான தகவல்களையும் கோரியுள்ளது.
புதிய சுற்றுப் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் டோஹாவில் கட்டார் மற்றும் அமெரிக்க மத்தியஸ்தர்கள் மூலம் நேற்று பிற்பகல் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
முன்மொழியப்பட்ட ஒப்பந்தம், குறித்து இஸ்ரேல் இன்னும் பகிரங்கமாகப் பதிலளிக்கவில்லை எனினும், பேச்சுவார்த்தைக்கு முன்பாக காசாவிலிருந்து துருப்புக்களை மீளப் பெறவோ அல்லது போரை முடிவுக்குக் கொண்டுவரவோ உறுதியளிக்காது எனக் கூறியிருந்தது.