இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் கட்டுக்குள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வீரியத்துடன் கூடிய கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதன்பின் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சிங்கப்பூரில் மே மாதம் முதல் வாரத்தில் 14 ஆயிரத்து 200 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுவோர் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தாய்லாந்தில் சாங்ரான் திருவிழாவைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.
ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் 31 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.