மட்டக்களப்பு, வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம், மந்திரியாறு பகுதியில் முதலை இழுத்துச் சென்ற நபர் 2 நாட்களின் பின் இன்று (22) இடுப்பு மேற் பகுதியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மந்திரியாறு நீரோடைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேளை குறித்த நபரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுங்கான்கேணி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய, இளம் குடும்பஸ்தரான வி.கிருஸ்ணதீபன் என்பவரே முதலைத் தாக்குதலுக்குள்ளாகிப் பலியானதாகத் தெரிய வந்துள்ளது.
திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு வைத்திய பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை காவல் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப் பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.