ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பெண்கள் இருவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்ட மது வரித் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்கள் இருவருக்கு 28 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் பிரதிவாதிகள் இருவருக்கும் அந்த தண்டனையை 7 வருடங்களில் அனுபவிக்குமாறு நீதிபதி இதன்போது உத்தரவு பிறப்பித்தார்.
2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண்கள் இருவர் மதுவரி திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இந்தக்குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்களை விடுவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் கட்டுப்பாட்டாளர் இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, பிரதிவாதிகள் தரப்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி தமது சேவைபெருநர்களுக்கு சிறு வயதில் பிள்ளைகள் இருப்பதாகவும் அவர்களது குடும்பங்கள் இவர்களை நம்பியே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.