ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையில் முடிவடைந்த ஐந்து மாதங்களில் நாடு முழுவதும் 225 தேயிலைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகாரசபைத் தலைவர் நிமல் உடுகம்பொல தெரிவித்துள்ளார்.
தேயிலைக் கொழுந்து பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, தேயிலைக் கொழுந்தின் தரக்குறைவு, தேயிலைத் தட்டுப்பாடு உள்ளிட்ட சில விடயங்கள் இதற்கு தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் தேயிலை கொழுந்து தட்டுப்பாட்டின் காரணமாக தேயிலை தொழிற்றுறை எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் இவ்வாறு எமது நாட்டின் தொழிற்றுறையை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல முடியாது என்றும் இந்த நிலைமை நீடிக்க இடமளிக்க முடியாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்பிட்டிய ரூகடஹேன்ன தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2030ஆம் ஆண்டில் 40,000 மில்லியன் கிலோ கிராம் முழுமையாக பதப்படுத்தப்பட்ட தேயிலையை உற்பத்தி செய்வதற்கு இலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் 157 வருடகாலம் பூர்த்தியாகியுள்ள இலங்கை தேயிலை வரலாற்றில் இதுபோன்ற பெருந்தொகை தேயிலை உற்பத்தி செய்தது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளர்.
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 2013 ஆம் ஆண்டே முழுமையாக பதப்படுத்தப்பட்ட தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அந்த வருடத்தில் மொத்தமாக 34 மில்லியன் கிலோகிராம் முழுமையாக பதப்படுத்தப்பட்ட தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இதுதொடர்பில் இலங்பை தேயிலை சபையின் ஆணையாளர் மகேஷ் ஜயவர்தன தெரிவிக்கையில்,
பொதுவாக ஒரு வருடத்துக்கு 20 – 25 இடையிலான தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இதே எண்ணிக்கையில் இதற்கு சமமான எண்ணிக்கையில் புதிதாக தேயிலை தொழிற்சாலைகள் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்றன.
அதேபோன்று தேயிலை தொழிற்சாலைகளின் நிர்வாகங்கள் மாற்றமடைந்த சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. 225 தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்பது எனக்குத் தெரியாது. இதுதொடர்பில் தேடிப்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.