நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் சங்கங்களினது ஒன்றியத்தின் 2 சங்கங்களால் நேற்று ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.
சுகாதார சேவையில் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சுகாதார அதிகாரிகள் தலையிடத் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை 8 மணிக்கு இந்தப் பணிப்புறக்கணிப்பு ஆரம்பமானது.
நிறைவுகாண் மருத்து சேவையின் ஆய்வுகூட நிபுணர்கள் மற்றும் உடலியக்க நிபுணர்கள் சங்கத்தினர் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், தங்களது கோரிக்கைகள் தீர்க்கப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் அனைத்து நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என, நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் சங்கங்களினது ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவுக்கமைய, மருத்துவ ஆய்வுகூடம் மற்றும் உடலியக்கம் ஆகிய துறைகளுக்கான பயிற்சி நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று பிற்பகல் தெரிவித்தன.
குறித்த வழக்கு எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி மீண்டும் விசாரிக்கப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.