அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக தெஹ்ரான் அதன் யுரேனியச் செறிவூட்டலை நிறுத்தாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடரும்போது ஈரான் மூன்று ஆண்டுகளுக்கு செறிவூட்டலை முடக்க முன்வரக்கூடும் என்று வெளியாகியுள்ள செய்திகளை முற்றிலும் தவறானது என்றும் அவர் நிராகரித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி தொடர்பில் அமெரிக்காவுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் ஒமானின் மத்தியஸ்தத்துடன் உடன்படிக்கையொன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.
இப்பேச்சுவார்த்தையின் ஐந்தாம் சுற்று கடந்த வெள்ளியன்று(23) ரோமில் இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தை இடம்பெற்று மூன்று நாட்கள் கடந்த நிலையில் ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எந்த ஈரானிய செறிவூட்டலையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது. அத்தகைய நிபந்தனையை ஈரான் நிராகரித்துள்ளது.
அவர் மேலும் கூறுகையில், யுரேனிய செறிவூட்டலை நிறுத்தி வைக்கும் திட்டத்தையும் ஈரான் நிராகரித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், அவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்தாலோ அல்லது பொருளாதாரத் தடைகளை விதித்தாலோ நாங்கள் பசியால் இறக்க மாட்டோம். உயிர்வாழ ஒரு வழியை நாங்கள் கண்டுபிடிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.