ஜேர்மனியில், புலம்பெயர்ந்தோர் தாக்குதல் நடத்தும் விடயங்கள் சமீப காலமாக தலைப்புச் செய்திகளாகிவரும் நிலையில், கத்தித் தாக்குதல் நடத்தி 18 பேரை காயப்படுத்திய ஜேர்மன் பெண்ணொருவரை துணிச்சலாக மடக்கிப் பிடித்த அகதி ஒருவருக்கு பாராட்டுகள் கிடைத்தன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரிலுள்ள பிரதான ரயில் நிலையத்தில் 39 வயதுள்ள ஜேர்மன் நாட்டவரான பெண்ணொருவர் திடீரென பொதுமக்களை கத்தியால் தாக்கினார். அந்த தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், அந்தப் பெண் கத்தியால் தாக்குதல் நடத்துவதைக் கண்ட மக்கள் தப்பியோட முயல, ஒரு அகதி அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தினார்.
அவரது பெயர் முகம்மது அல் முகம்மது (19). அவர் அந்தப் பெண்ணை நெருங்கவும், செசன்யா நாட்டவரான புலம்பெயர்ந்தோர் ஒருவர் அந்தப் பெண்ணை முழங்காலில் மிதிக்க, அந்தப் பெண் கீழே விழுந்துள்ளார்.
உடனே, அவர் மீது பாய்ந்த முகம்மது, அந்தப் பெண்ணின் கையை அவரது முகுதுப் பையுடன் சேர்த்து அழுத்திவைத்துக்கொள்ள, பொலிசார் வந்து அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளார்கள்.
அந்தப் பெண்ணால் மேலும் பலர் தாக்குதலுக்குள்ளாவதைத் தடுத்த முகம்மதுவை பாராட்டிய பொலிசார், அவருக்கு காபி ஒன்றை வாங்கிக்கொடுத்து அனுப்பியதாக செய்திகள் வெளியாகின.
விடயம் என்னெவன்றால், முகம்மதுவைக் குறித்த போலியான செய்திகள் பல சமூக ஊடகங்களில் பரவத்துவங்கியுள்ளன.
முகம்மதுவின் படத்தை போட்டு, அல்லது AI உதவியுடன் அவரது படத்தை உருவாக்கி, போலியான செய்திகள் பரவத் துவங்கியுள்ளன.
முகம்மதுவின் செயல் குறித்து சந்தேகம் எழுப்புவதுடன், அவரைக் குறித்து அவதூறாகவும் செய்திகள் பரப்பப்பட்டுவருவதால், உண்மையாகவே அவர் என்ன செய்தார் என்பதை மக்கள் சந்தேகிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஊடகத்துறை நிபுணரான Una Titz என்பவர் கூறும்போது,
இந்த செய்தியில் ஒரு சிரிய அகதி காப்பாற்றுபவராக செயல்பட்டார் என்னும் உண்மை, அகதிகள், குறிப்பாக, சிரிய அகதிகளை வன்முறையாளர்களாகவும், கத்துக்குத்து தாக்குதல் நடத்துபவர்களாகவும் பார்க்கும் உலகின் பார்வைக்கு பொருந்தவில்லை என்கிறார்.
அதாவது, ஒரு சிரிய அகதி தாக்குதலை நிறுத்தினார், பலரைக் காப்பாற்றினார் என்பதை பலராலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்கிறார் அவர்.
ஆக, முகம்மதுவின் நற்செயலை மக்கள் சந்தேகிக்கும் வகையில், சமூக ஊடகங்களில்போலிச் செய்திகளை பரப்பி வருகிறது ஒரு கூட்டம்.