நாகை-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று தொடங்கியுள்ளது. இதில் 112 பேர் பயணம் செய்தார்கள்.
நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு 2023 அக்டோபர் 14ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23ம் திகதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்தாண்டு ஆகஸ்ட் 16ம் திகதி முதல் பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது.
இருநாட்டு பயணிகளின் ஆர்வத்தால் சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இரு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்தடுத்து இடம்பெற்ற குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த 24ம் திகதி முதல் கப்பல் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து 8 நாட்களுக்கு பிறகு இன்று முதல் வழக்கம்போல நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் புறப்பட்டு சென்றது.