தெஹ்ரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஹைஃபாவை ஆகிய நகரங்களை இலக்கு வைத்து 100 ஏவுகணைகளை ஈரான் ஏவியதாக, ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
தெஹ்ரானில் உள்ள ஷஹ்ரான் எண்ணெய் கிடங்கு மற்றும் ஒரு எரிபொருள் தாங்கி தாக்கப்பட்டதில் அங்கு தீப்பரவல் ஏற்பட்டதாகவும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது எனவும், அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை இன்றைய தினம் அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் தொடங்கவிருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
எனினும், தற்போது பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மத்தியஸ்தம் வகிக்கும் ஓமான் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் பின்வாங்கவில்லை எனின் ‘இன்னும் கடுமையான’ பதிலடி கொடுக்கப்படும் என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் எச்சரித்துள்ளார்.
அதேநேரம், இஸ்ரேலின் மேற்கு கலிலியில் 20 வயதுடைய பெண்ணொருவர் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்த 7 பேர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், இஸ்ரேலின் அவசர சேவை தெரிவித்துள்ளது.
