குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12-ந்தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 270 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (AAIB) சிறப்புக் குழு விசாரணை நடத்தியது.
“விபத்துக்குள்ளான விமானத்தில் இரு என்ஜின்களுக்கான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ‘ரன்’ நிலையிலிருந்து ‘கட்ஆஃப்’ நிலைக்கு மாறியதால், விமானம் திடீரென உயரத்தை இழந்தது. விமானி ஒருவர், ஏன் கட் ஆஃப் செய்தீர்கள்? என்று மற்றவரிடம் கேட்க, அதற்கு மற்ற விமானி, நான் செய்யவில்லை என்று பதிலளித்தது காக்பிட் குரல் பதிவில் பதிவாகியுள்ளது என்று AAIBயின் 15 பக்க ஆரம்பகட்ட அறிக்கை கூறியது.
இதைத்தொடர்ந்து விமான கட்டுப்பாட்டு இயக்குநரகம் (DGCA) போயிங் 787 மற்றும் 737 விமானங்களை இயக்கும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் சிஸ்டம் ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
இதைத் தொடர்நது ஏர் இந்தியா தனது போயிங் 787 ரக விமானங்களில் விமான எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் (FCS) சிஷ்டமில் பரிசோதனைகளை மேற்கொண்டது. இதில் எரிபொருள் சுவிட்களில் சுவிட்சில் எந்தப் பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
