அமெரிக்கா – ரஷ்யா ஜனாதிபதிகளுக்கு இடையில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் பங்கேற்க யுக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கிக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், இதனை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
எனினும், ட்ரம்பின் முயற்சியை ரஷ்ய ஜனாதிபதி புடின் புறக்கணித்ததால் போரை நிறுத்துவதற்கு ட்ரம்ப் காலக்கெடு விதித்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ட்ரம்ப் மற்றும் புடின் ஆகியோர் எதிர்வரும் 15 ஆம் திகதி சந்தித்து பேச்சு நடத்தவுள்ளனர்.
இதன்போது, போர்நிறுத்தமே முக்கிய பேசு பொருளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யுக்ரைன் தரப்பில் முத்தரப்பு பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்ட போதிலும், அதனை ரஷ்யா ஏற்கவில்லை.
ஆனால் இந்த விடயத்தில் யுக்ரைன் இல்லாமல் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்தநிலையில், ட்ரம்ப் மற்றும் புடின் இடையிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்க யுக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுப்பது குறித்து வெள்ளை மாளிகை பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்கா ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தையில் ஸெலன்ஸ்கி பங்கேற்பாரா? என்பதில் தெளிவான எவ்விதப் பதில்களும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
