அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், துப்பாக்கிச் சன்னம் தலையைத் துளைத்துச் சென்றமையே மரணத்திற்கு நேரடி காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் (17 வயது) என்ற இளைஞன் உயிரிழந்தார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று சட்ட வைத்திய அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை நடைபெற்றது. அதன் முடிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
துப்பாக்கிச் சன்னமானது இளைஞனின் நெற்றியில் பாய்ந்து, தலைக்குள் ஊடுருவியுள்ளது.
அவ்வாறு ஊடுருவிய சன்னம் மூளையைத் துளைத்துச் சென்றமையால் ஏற்பட்ட பெரும் பாதிப்பினால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

