கடந்த பெப்ரவரி மாதம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டி இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மனித உரிமை ஆர்வலர் அமைபினரால் முனெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சிறுவனின் உறவுகள் மற்றும் ஏனையோர் கலந்துகொண்டு, பொலிசாருக்கு எதிரான கோசங்கள் தாங்கிய பதாகைகளுடன் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக குறித்த போராட்டம் ஊர்காவற்றுறை நீதிமன்றின் முன்பாக காலை 11 மணிக்கு ஆரம்பமானது.
போராட்டம் ஆரம்பமான சில நிமிடங்களில் நீதிமன்ற பொலிசாரால் நீதுமன்றுக்கு முன்பாக போராட்டம் நடத்த முடியாது எனக் கூறி நீதிமன்ற வளாகத்தை கடந்து போராட்டத்தை முன்னெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
பொலிசாரின் கோரிக்கையை ஏற்ற போராட்டக்காரர்கள் பின்பு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது பொலிசாரின் செயலைக் கண்டித்து பல்வேறு சுலோங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கி, கோஷமிட்டு தமது எதிர்ப்பை காட்டிய போராட்டக் காரர்கள் குறித்த கொலைக்கு காரணமான பொலிசாரை தண்டிக்க வேண்டும் என்றும் குறிப்பாக தனது மகனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே சுட்டதாக குற்றம் சாட்டினர்.
அத்துடன் மிலேச்சத்தனமான கொலைகளை பொலிசார் இனியொரு தடவை மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியதுடன் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

