பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே, தனது மகனைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை எனவும், அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறையில் எலிகள் தொல்லை இருப்பதாகவும் பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்டுள்ள, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தடுத்து வைக்கப்பட்டுள்ள விதம் குறித்து எழுந்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிக்கையை பொலிஸார் எதிர்பார்த்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், தடுத்து வைக்கப்பட்டுள்ள சூழல் குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, சிறையறையில் எலிகள் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தமக்கு முதன்முறையாகத் தெரியவந்துள்ளதாகவும், இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழங்கவுள்ள விரிவான அறிக்கையின் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
