டில்லியில் இருந்து புறப்பட தயாராகவிருந்த சுவிஸ் விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 6 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
தலைநகர் டில்லியில் இருந்து சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகருக்கு 245 பயணிகளுடன் சுவிஸ் ஏர் விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட விருந்தது. ஓடுதளத்தில் இருந்து விமானம் புறப்பட்டபோது அதன் பின்புறம் உள்ள இடது சக்கரத்தில் புகை வருவதை விமானி கவனித்தார். உடனடியாக விமானத்தை இயக்குவதை அவர் நிறுத்தினார்.
அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தன. பயணிகள் அனைவரும் அவசரகால சறுக்குப்பாதைகள் வழியாக வெளியேற்றப்பட்டனர். சறுக்குப்பாதைகளைப் பயன்படுத்த முடியாதவர்களுக்கு ஏணிகளும் வழங்கப்பட்டன.
இருப்பினும், இந்த மீட்பு பணியின்போது ஆறு பயணிகள் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக தில்லி விமான நிலையத்தின் ஓடுதளம் சுமார் 30 நிமிடங்கள் அவசரநிலை அறிவிக்கப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்திய சுவிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஊழியர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
