சர்வதேச அரங்கில் இலங்கையின் பெருமையை மீண்டும் ஒருமுறை நிலைநாட்டியுள்ளார் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் பரமலிங்கம் தாரகன்.
சமோவா நாட்டில் அண்மையில் நிறைவடைந்த பொதுநலவாய இளையோர் மற்றும் கனிஷ்ட பளுதூக்கல் சம்பியன்சிப் போட்டியில் அவர் வெண்கலப் பதக்கத்தைச் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 27 முதல் மே முதலாம் திகதி வரை சமோவாவின் ஏபியா நகரில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன.
இதில் கனிஷ்ட வயதுப் பிரிவின் கீழ், 110 கிலோகிராமுக்கும் அதிகமான எடைப்பிரிவில் பரமலிங்கம் தாரகன் களமிறங்கினார்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஸ்னாட்ச் முறையில் 98 கிலோகிராம் எடையையும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 132 கிலோகிராம் எடையையும் அவர் வெற்றிகரமாகத் தூக்கினார்.
இதன்படி, ஒட்டுமொத்தமாக 230 கிலோகிராம் எடையைத் தூக்கி, மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
யுத்தத்திற்குப் பின்னரான சூழலில், வடபகுதியிலிருந்து சர்வதேச விளையாட்டு மேடைகளில் தடம் பதிக்கும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில், யாழ். மண்ணுக்கும் தான் கல்வி கற்கும் இந்துக் கல்லூரிக்கும் மாபெரும் பெருமையைத் தேடித்தந்துள்ள தாரகனுக்குப் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை பளுதூக்கல் சங்கத்தின் கீழ் உரிய பயிற்சிகளைப் பெற்று, சர்வதேசத் தரத்திலான இச் சாதனையை அவர் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
