தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ வகை போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று சனிக்கிழமை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த 22 தேரர்களையும் வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 25-ஆம் திகதி தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போது, 112 கிலோகிராம் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
‘அமிதானந்த’ எனும் தேரர் ஒருவரே இந்த கடத்தலை வழிநடத்தியிருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. களுத்துறை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்ட இவர், நாளை (03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குறித்த தேரரின் வழிகாட்டலில் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் இவருக்கு உதவியாக இருந்த நபர் ஒருவர் அத்துருகிரிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்தேகநபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னரே இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
