கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி அவருக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்னா உள்ளிட்ட என்டிஏ ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக, பிரதமர் மோடி மேடையில் இருந்த 98 வயதான மூத்த பாஜக தொண்டர் மகான்லால் சர்க்காரிடம் ஆசி பெற்றார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. சுவேந்து அதிகாரி நந்திகிராம் மற்றும் பவானிப்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பவானிப்பூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை 15,115 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் மேற்குவங்க சட்டப்பேரவையில் பாஜக-வுக்கு 3 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 77 எம்எல்ஏக்களாக உயர்ந்தது. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் 207 பாஜக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். 9 மாவட்டங்களில் திரிணமூல் காங்கிரஸுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை.
