முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவாக இன்று செவ்வாய்க்கிழமையும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 17ஆவது ஆண்டு நினைவுதினம் எதிர்வரும் மே 18ஆம் திகதி நினைவேந்தப்படுகிறது. மே 12ஆம் திகதி முதல் முள்ளிவாய்க்கால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பமான இன்றைய தினத்தில் தமிழ் மக்கள் பெருவாரியாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை, செல்வச்சந்நிதி, நல்லூர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் வீடுகளில் அரிசி சேகரித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்குவது வழமை. இன்றைய தினம் வழக்கம்போன்று வல்வெட்டித்துறையில் இந்த செயல்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதேபோன்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் நல்லூரிலும் இலங்கை தமிழ் அரசு கட்சியால் வடமராட்சி செல்வச்சந்நிதி ஆலயம் முன்பாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இதுதவிர, முல்லைத்தீவில் முள்ளியவளை சந்தியிலும் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்ட பந்தலிலும் மன்னாரில் பள்ளிமுனை பெருக்கமரத்தடி பகுதியிலும் மட்டக்களப்பில் காந்தி பூங்காவிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது தமிழின அழிப்பின் அடையாள குறியீடுகளில் ஒன்றாகும். இறுதிப் போரின்போது தமிழ் மக்கள் குறுகிய நிலப்பரப்பில் தஞ்சமடைந்தனர். போரால் மக்கள் மரணித்துக் கொண்டிருந்தநிலையில் பட்டினிச்சாவும் மக்களை வாட்டியது. அந்தச் சமயம் உப்பு இல்லாத கஞ்சியே மக்களின் உயிரை காத்தது. இறுதிப் போரின் நினைவை கடத்தும்விதமாகவே முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



