உலகெங்கிலும் அதிகரித்துள்ள போர்கள் – இராணுவ செலவின உயர்வு – போர் தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள மனிதநேயமற்ற பரிணாமம் என்ப உலகை அழிவுச் சுழலுக்கு இட்டுச் செல்கின்றன என்று திருத்தந்தை 14ஆம் லியோ எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அல்ஜசிரா வெளியிட்டுள்ளா செய்தியில், ரோமில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றிய திருத்தந்தை லியோ, ஐரோப்பிய நாடுகளின் இராணுவ செலவினங்கள் பனிப்போர் காலத்துக்கு பிந்தைய உச்சத்தை எட்டியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
2025ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் இராணுவச் செலவினம் 14 சதவீதம் அதிகரித்து 864 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. கல்வி மற்றும் ஆரோக்கியத்துக்கான முதலீடுகளைக் குறைத்து, இராஜதந்திரத்தின் மீதான நம்பிக்கையைத் துண்டித்து, ஆயுதங்களை அதிகரிப்பதை ‘தற்காப்பு’ என்று அழைக்க வேண்டாம்’ என அவர் வலியுறுத்தினார்.
இது பொது நலனில் அக்கறையற்ற மேல்தட்டு வர்க்கத்தினரை மட்டுமே வளப்படுத்தும் செயல் என அவர் சாடினார்.
மேலும், அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல்களை திருத்தந்தை விமர்சித்ததைத் தொடர்ந்து சமீபத்திய வாரங்களில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் கோபத்துக்கு உள்ளானார். ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களுக்காக அதிக நிதி ஒதுக்க வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், திருத்தந்தையின் இந்த கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
நவீன போர்க்களங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதையும் திருத்தந்தை கடுமையாக சாடியுள்ளார். உக்ரைன், காசா, லெபனான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் நடக்கும் மோதல்கள், போர் மற்றும் தொழில்நுட்பத்துக்கு இடையிலான ‘மனிதநேயமற்ற பரிணாமத்தை’ காட்டுகிறது. இது உலகை ‘அழிவுச் சுழலுக்கு’ இட்டுச் செல்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
