எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் வரை மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான எந்தவொரு கோரிக்கையும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்படமாட்டாது என்று துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல வினாவுக்கு பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
சந்தையில் நிலவும் டொலர் உயர்வு மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் மின்சாரக் கட்டணம் மேலும் உயருமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் நேரடித் தாக்கம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே ஏற்படும். ஏனைய சாதாரண நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மானியத்தை வழங்கி, அந்தச் சுமையைத் தாங்கிக்கொண்டுள்ளது. எனவே, வரும் செப்ரெம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நாங்கள் கோரிக்கை விடுக்க மாட்டோம் – என்று கூறினார்.
