நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகளால் மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த ஆண்டு நடத்த இயலாது என்று அரசாங்கத்தின் தாய்க் கட்சியான ஜே. வி. பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அடுத்த ஆண்டுதான் ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகள் 2017 முதல் செயலிழந்து கிடக்கின்றன. ஆளும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை அதிகாரப் பரவலாக்கம், அரசமைப்புச் சீர்திருத்தம் மற்றும் காலங்கடந்த மாகாண சபைகள் தேர்தலை நடத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
தேர்தல் முறை மாற்றத்துக்கு வழிவகுக்கும் புதிய சட்டத்தால் ஏற்பட்ட ஒரு சட்டச் சிக்கல் காரணமாக, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழு சிரமத்தை எதிர்கொள்கிறது.
2017ஆம் ஆண்டின் மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்த சட்டம் தொகுதிகளில் இருந்து 50 வீதம் விகிதாசார பட்டியலில் இருந்து 50 வீதம் எனும் கலப்பு உறுப்பினர் தேர்தல் தெரிவுமுறையை அறிமுகப்படுத்தியது.
ஒரு தொகுதி மறு வரையறை ஆணைக்குழு தேவையான அறிக்கையைத் தயாரித்து 2018இல் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது.
கட்சிகளுக்கிடையேயான அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
புதிய தேர்தல் முறையின் கீழ் தொகுதி மறுவரையறை செய்வது சட்டரீதியாக சவாலானதாகவும் அதிக நேரம் எடுப்பதாகவும் இருந்தால், தேர்தலை நடத்துவதற்கு பழையமுறையையே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் முறையைத் தெரிவது தொடர்பான விடயத்தை ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்றத்தால் தெரிவுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது
