மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே ரில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார். அதனால், மாகாண சபைகள் தேர்தலை அரசாங்கம் ஒருபோதும் நடத்தப் போவதில்லை என்பது உறுதி – இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல்கள் உரிய காலத்தில் நடக்காமல் இருக்கும்போது, அது தொடர்பில் அப்போது இருந்த அரசாங்கங்களுக்கு எதிராக செயல்பட்டது மக்கள் விடுதலை முன்னணி. அதேநேரம் அனைத்து தேர்தல்களையும் படிப்படியாக நடத்துவோம் என்றே இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தெரிவித்தார்கள். அதன் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தினார்கள். ஆனால், அந்த தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதனால் அரசாங்கம் மாகாண சபைகள் தேர்தலுக்கு உடனே செல்லப் போவதில்லை என்பது யாரும் அறிந்த விடயம்.
மாகாண சபைகள் தேர்தலை விரைவாக நடத்தவேண்டும் என்ற தேவை அரசாங்கத்துக்கு இருக்குமாக இருந்தால்இ மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்துக்கு சட்ட திருத்தம் கொண்டுவந்து, தேர்தலை நடத்தலாம். அதற்கான பெரும்பான்மை பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு இருக்கிறது. ஆனால், அரசாங்கம் அதனை செய்யாமல் தற்போது இதுதொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்திருக்கிறது. இது எந்தளவு சாத்தியமாகும் என்பது தெரியாது.
இதேநேரம் அரசாங்கம் இந்தமுறை வரவு – செலவு திட்டத்தில் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்காக நிதி ஒதுக்கி இருக்கிறது. அதேநேரம் டித்வா புயல் அனர்த்த பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் பாராளுமன்றத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், மாகாண சபைகள் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை டித்வா புயல் அனர்த்த நிவாரணத்துக்கு ஒதுக்கியதாக ரில்வின் சில்வா தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு தெரிவிப்பதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை. ஏனெனில், அவர் இந்த அரசாங்கத்தில் எந்த பதவியிலும் இல்லை.
எவ்வாறு இருந்தாலும் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கான எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை. காலத்தை கடத்துவதற்கே ஒருசில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசாங்கம் அடுத்த வருடமும் தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே தற்போது ரில்வின் சில்வா தெரிவித்திருக்கிறார் – என்றும் கூறினார்.
