எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டவரான பெண் ஒருவர் இந்தியாவின் பெங்களூரு தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பெண்ணுக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தெற்காசிய நாடொன்றில் பதிவாகும் முதல் எபோலா நோயாளி இவராவார்.
உலக சுகாதார அமைப்பால் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த நோய், இந்தியாவில் இதுவரை எவருக்கும் கண்டறியப்படவில்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் அறிவித்த அடுத்த நாளே இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
28 வயதான இந்த உகாண்டா நாட்டுப் பெண், உடலில் லேசான வலி இருப்பதாகத் தெரிவித்துள்ள போதிலும், அவரது ஆரோக்கிய நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை.
கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த இந்த பெண், அகமதாபாத்திலிருந்து பெங்களூரு நகரத்துக்குப் பயணம் செய்துள்ளார். விமான நிலையங்கள் மற்றும் நுழைவு வாயில்களில் இந்தியா சோதனைகளையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளதுடன், பரிசோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் பிற பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியா தனது குடிமக்களை ஏற்கனவே கேட்டுள்ளது. ஆபிரிக்காவில் நிலவும் பொது சுகாதாரச் சிக்கல்கள் காரணமாக, இந்த வாரம் புது டெல்லியில் நடைபெறவிருந்த ‘இந்தியா – ஆபிரிக்கா மன்ற உச்சிமாநாடு’ ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, உலகளவில் சந்தேகிக்கப்படும் 900-க்கும் மேற்பட்ட நோயாளிகளில், 101 பேருக்கு ‘புந்திபுக்யோ’ எனும் வைரஸ் வகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸிற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது சிகிச்சையோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
