அமெரிக்க விமானப் படைத்தளத்தை தாக்கியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.
ஈரான்மீது அமெரிக்கா மேற்கொண்ட முந்தைய தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்கப்பட்ட அமெரிக்கத் தளம் எங்கு அமைந்துள்ளது என்பது குறித்து ஈரான் தகவல் வெளியிடவில்லை.
இதனிடையே, ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமான அச்சுறுத்தல்களை தமது பாதுகாப்புப் படைகள் இடைமறித்தன என்று குவைத் தெரிவித்துள்ளது.
மேலும், குவைத்தை நோக்கி ஈரானிலிருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படும் பொலிஸ்டிக் ஏவுகணையொன்றை வெற்றிகரமாக இடைமறித்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், அது அமெரிக்கத் தளத்தையே குறிவைத்ததா என்பது குறித்துத் தெளிவுபடுத்தப்படவில்லை.
மீண்டும் தீவிரமடைந்துள்ள இந்த மோதல்நிலை, அமெரிக்கா – ஈரான் இடையிலான பதற்றத்துக்கு தீர்வு காணும் முயற்சிக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இன்று வியாழக்கிழமை அதிகாலை அமெரிக்க படைத்தளத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் முன்னதாக ஈரானின் பாந்தர் அப்பாஸ் பகுதிமீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அந்தத் தளமே பயன்படுத்தப்பட்டதாக கருதியே அது குறிவைக்கப்பட்டதாகவும் இஸ்லாமியப் புரட்சிகரப் படை தெரிவித்துள்ளதாக அந்த நாட்டின் அரச ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா தாக்குதல்கள் கடுமையான மீறல் என அமெரிக்க மத்திய படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
