உலகளாவிய வெப்பநிலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்கு உயரக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இதனிடையே, இப்போது அதிகரித்துள்ள வெப்பத்தால் பிரித்தானியாவில் 12 பேரும் பிரான்ஸில் 7 பேருமாக 19 பேர் உயிரிழந்தனர்.
உலக வானிலை அமைப்பும் பிரித்தானிய வானிலை ஆய்வு மையமும் இணைந்து வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, உலகின் சராசரி வெப்பநிலை, தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் 1.3 முதல் 1.9 செல்சியஸ் பாகை வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த ஐந்து குளிர்காலங்களில் வட அரைக்கோளப் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு பதிவாகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஐரோப்பா, அலஸ்கா மற்றும் சைபீரியாவில் கடுமையான மழையும் அமேசன் பிராந்தியத்தில் கடுமையான வறட்சியும் ஏற்படக்கூடும் என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், இந்த ஆண்டின் இறுதியில் எல் நினோ காலநிலை உருவாகி, 2027ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உலக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மேற்கு ஐரோப்பாவை தாக்கியுள்ள கடுமையான வெப்ப அலை காரணமாக பிரான்ஸில் ஏழு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஐவர், வெப்பத்திலிருந்து தப்பிக்க நீர்நிலைகளுக்குச் சென்றபோது நீரில் மூழ்கி பலியாகினர். மேலும் இருவர், கடுமையான வெப்பத்தால் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸின் பல பகுதிகளில் வெப்பநிலை 37 செல்சியஸ் பாகையைத் தாண்டியுள்ளதுடன், இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல் இருப்பது மக்களின் உடல்நலத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதேபோன்று, பிரித்தானியாவிலும் அதிக வெப்பத்தைத் தாங்க முடியாது நீர் நிலைகளுக்கு சென்றவர்களில் 12 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவ்வாறு இறந்தவர்களில் அதிகளவிலானோர் சிறுவர்களாவர்.
