விமானத்தில் இளம் பெண்ணை மானபங்கம் செய்தவருக்குச் சிறை

ஜப்பானின் ஒக்கினாவாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானத்தில், 17 வயது இளம் பெண்ணைத் தொடர்ச்சியாகப் பலமுறை மானபங்கம் செய்த இந்தோனீசிய இளையருக்கு 15 மாதச் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.

20 வயது ஆரியல் லுத்ஃபியான் முவாரிஃபின் தம்மீதான மானபங்கக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஒக்கினாவாவில் கட்டுமான ஊழியராகப் பணிபுரிந்து வந்த ஆரியல், கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியன்று சிங்கப்பூர் வழியாகத் தமது சொந்த நாடான இந்தோனீசியாவுக்குத் திரும்ப விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

தாய்லாந்தில் வசிக்கும் 17 வயது பெண், அதே விமானத்தில் சிங்கப்பூர் வழியாகத் தமது சொந்த நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். விமானத்தில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். பயணத்தின்போது, அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஆரியல், பெண்ணின் தொடை, வயிறு, இடுப்பு மற்றும் மார்பகப் பகுதிகளைத் தொட்டார்.

அதிர்ச்சியடைந்து விழித்துக்கொண்ட அந்தப் பெண், அவரிடமிருந்து விலக முயன்றபோதும் ஆரியல் தொடர்ந்து அவரது முதுகில் தொட்டு அநாகரிகமாக நடந்துகொண்டார்.

இருக்கையிலிருந்து எழுந்த அந்தப் பெண், விமானப் பணிப்பெண்ணிடம் இது குறித்துப் புகார் அளித்தார். உடனடியாக அவர் வேறோர் இருக்கைக்கு மாற்றப்பட்டார். விமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சிங்கப்பூரில் விமானம் தரையிறங்கிய அதே நாளில் ஆரியல் கைது செய்யப்பட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles