விடுதலைப் புலிகள் அமைப்பை மகிமைப்படுத்தும் பாடல்களைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் தொடர்பாக சமூகவலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் குறித்து பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
பொழுதுபோக்கு நிகழ்வுகளில் பாடல்கள் பாடுவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் பொய்யானவை – தவறாக வழிநடத்துபவையாகும்.
கிளிநொச்சி உதயநகரை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர்இ கடந்த மே 31 ஆம் திகதி சாவகச்சேரி நாவற்குழியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகள் தொடர்பான பாடல்களைப் பாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின்பேரில் ஜூன் 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
யாழ்ப்பாண பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், நிகழ்ச்சியில் பாடப்பட்ட இரண்டு பாடல்களை சந்தேகநபர் தொகுத்து அவற்றை மீளாக்கம் செய்து விடுதலைப் புலிகள் அமைப்பை மகிமைப்படுத்தும் வகையில் தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவேற்றியிருந்தார். அந்தக் காணொலிகள் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவான உள்ளடக்கங்கள் இடம்பெறும் வகையில் திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரவச் செய்யப்பட்டன. இதையடுத்தே, அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, ஜூன் 3ஆம் திகதி சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் அரசமைப்பும் நடைமுறையிலுள்ள சட்டங்களும் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு அமைவாக அனைத்து குடிமக்களும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பொலிஸார், சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களால் மக்கள் தவறாக வழிநடத்த வேண்டாம் – என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
