மலேசியாவின் பேராக், தாப்பா அருகே சமீபத்தில் ஒரு மலையேறுபவர் இரண்டு வாரங்களாகக் காணாமல் போனதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்பு குறித்த கவலைகளையடுத்து, இனி அனைத்து நிரந்தர வனக் காப்பகங்களிலும் சில மலையேற்ற நடவடிக்கைகளுக்கான விண்ணப்பங்களை ஜூலை 1 முதல் தற்காலிகமாக சிலாங்கூர் அரசு நிறுத்தி வைக்கும் என்று தெரிவித்துள்ளது.
சிலாங்கூர் வனத்துறை, மறு அறிவிப்பு வரும் வரை “டிரான்ஸ் ஹைக்கிங்” மற்றும் “கம்ப்ரஸ் ஹைக்கிங்” நடவடிக்கைகளுக்கான புதிய விண்ணப்பங்களைச் செயல்படுத்தாது என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியுமாறு பொதுமக்களுக்கு அது நினைவூட்டியதுடன், மாநில வனச் சட்டங்களின் கீழ், விதிமீறுபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, RM30,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.
அதிக ஆபத்துள்ள பல மலையேற்றப் பாதைகளில் “கம்ப்ரஸ்ட் ஹைக்கிங்” நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கும் பேராக் வனத்துறையின் இதேபோன்ற முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“டிரான்ஸ் ஹைக்கிங்” என்பது ஒரு வனக் காப்பகம் அல்லது மலைத்தொடரைக் கடந்து செல்லும் நீண்ட தூர, ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் மலையேற்றத்தைக் குறிக்கிறது, அதேசமயம் “ஹைக்கிங் கம்ப்ரஸ்” என்பது வேகமான அல்லது நேர வரம்புக்குட்பட்ட மலையேற்ற நடவடிக்கையைக் குறிக்கிறது.
கடந்த மே 24 அன்று, தாப்பாவில் உள்ள பத்து பூத்தே மலையில் நடைபெற்ற டிரான்ஸ் ஸ்பென்சர் சாப்மேன் மலையேற்றப் பயணத்தின்போது, மலையேறுபவரான ஜஸ்லிண்டா சலுதீன் காணாமல் போனார்.
இந்நிலையில், ஜூன் 6 அன்று, தாப்பா மலைப்பகுதியின் போஸ் முசோவில், கம்போங் லுபுக் கஹாரு அருகே, ஒரு பழங்குடி கிராமவாசியால் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்!
