மலேசியாவின் ஜொகூர் பாசிர் கூடாங்கில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் இருந்து நேற்று காலை வெளியான செம்மஞ்சள் நிறப் புகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புகை வெளியேற்றம் குறித்து சுற்றுச்சூழல் துறை விசாரித்து வருகிறது.
சமூக ஊடகங்களில் வைரலான இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, காலை சுமார் 9.45 மணியளவில் ஜலா கெலுலிக்குத் தங்கள் அதிகாரிகள் அனுப்பப்பட்டனர் என அத்துறை தெரிவித்துள்ளது.
காலை சுமார் 11.10 மணியளவில் அடையாளம் காணப்பட்ட அந்த இடத்திற்கு வந்த புலனாய்வாளர்கள், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் இன்னும் உணரப்பட்டாலும், செம்மஞ்சள் நிறப் புகை வெளியேறுவது நின்றுவிட்டதைக் கண்டறிந்தனர்.
இந்தச் சம்பவத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறியவும், 1974 ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தரச் சட்டத்தை மீறி ஏதேனும் மாசுபடுத்தும் பொருள் வெளியேற்றப்பட்டதா என்பதைத் தீர்மானிக்கவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று அது ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
மீறல்கள் கண்டறியப்பட்டால், பொறுப்பான தரப்பினர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் அமைந்துள்ள எஸ்.எம்.கே தாமான் பாசிர் பூத்தே மற்றும் எஸ்.எம்.கே பாசிர் கூடாங் 3 ஆகிய பள்ளிகளில் காற்றின் தரக் கண்காணிப்பு நடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் துறை கூறியது.
இரு பள்ளிகளிலும் அளவீடுகள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறாமல், இயல்பான அளவிலேயே இருந்தன என்று அது தெரிவித்தது.
