முல்லைத்தீவு குருந்தூர்மலை விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குருந்தூர்மலையில் வரலாற்று ரீதியாக சைவக் கோயில் இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. அந்தப் பகுதி பௌத்த மரபுரிமை சான்றுகளைக் கொண்ட தொல்லியல் தளம் என்றும் தொல்லியல் திணைக்களம் அரசுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த நிலைப்பாட்டைத் தமிழ்த் தரப்பினர் கடுமையாக மறுத்துள்ளனர். குருந்தூர்மலை தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலம். அங்கு சிவன் மற்றும் ஐயனார் வழிபாடு நீண்டகாலமாக இடம்பெற்று வந்தது என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் பலரும், அந்தப் பகுதியில் கண்டறியப்பட்ட சிதைவுகள், தமிழ் வரிவடிவ கல்வெட்டுகள் மற்றும் பிற தொல்லியல் சான்றுகள் அந்தப் பகுதியின் தொன்மையை வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
இதனிடையே, குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை, நில ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுகள், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் விவசாய நிலங்கள் தொடர்பான சர்ச்சைகளும் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வரலாற்று மற்றும் மத அடையாளங்கள் தொடர்பான விவாதங்கள் தொடரும் நிலையில், குருந்தூர்மலை விவகாரமும் அரசியல் மற்றும் சமூக மட்டங்களில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.
