கனடாவில் வெறுப்புணர்வினால் தூண்டப்படும் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் ‘சட்டமூலம் சி-9’ நிறைவேற்றப்பட்டுள்ளது.
‘வெறுப்புணர்வை முறியடிக்கும் சட்டம்’ என்று அழைக்கப்படும் இந்த புதிய சட்டத்தின் கீழ், ‘தூக்குக்கயிறு’ என்பது தடைசெய்யப்பட்ட ஒரு வெறுப்பு அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கனேடிய செனட் சபை, இந்த சட்டத்தில் ஒரு முக்கிய திருத்தத்தைக் கொண்டுவந்து தூக்குக்கயிறை தடைசெய்யப்பட்ட அடையாளங்களின் பட்டியலில் சேர்த்ததை அடுத்து, நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறி மற்றும் அச்சுறுத்தலின் நீண்டகால வரலாற்று அடையாளமாக இது திகழ்வதால், இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சட்டத்திருத்தத்தை கறுப்பின மக்களுக்கான நிதி அமைப்பு வரவேற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கனேடிய அரச காவல்துறை மற்றும் கனேடிய புள்ளிவிவரத் துறையின் தரவுகளின்படி, 2019ஆம் ஆண்டிலிருந்து கனடாவில் வெறுப்புணர்வுக் குற்றங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
இதில் கறுப்பின கனேடியர்களே அதிகளவில் இலக்காக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்,” என சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் முதன்மை நிர்வாக அதிகாரி கிரெய்க் வெலிங்டன் கூறுகையில், “கறுப்பின மக்களுக்கு எதிரான இனவெறி அச்சுறுத்தலின் மிக மோசமான அடையாளங்களில் ஒன்றான தூக்குக்கயிறு, இந்த சட்ட மூலத்தில் சேர்க்கப்பட்டிருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகும். இந்த இடைவெளியைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்த நீதியமைச்சர் சீன் பிரேசர், அவரது குழுவினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எங்களது நன்றிகள்,” என்று தெரிவித்துள்ளார்.
