அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் கடந்த பெப்ரவரி மாதம் ஏற்பட்ட போருக்கு பின்னர், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இன்று (24) பாகிஸ்தான் சென்றுள்ளார்.
இஸ்லாமாபாத் நகரில் தரையிறங்கிய ஈரான் ஜனாதிபதியை , பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி, பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பல அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர்.
ஈரான் ஜனாதிபதியுடன்அந்நாட்டு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவொன்றும் இப்பயணத்தில் இணைந்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஈரானிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையின்படி,
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும், பாகிஸ்தான் மேற்கொண்ட கூட்டு முயற்சி, ஆதரவு மற்றும் இராஜதந்திர முயற்சிகளுக்கு, ஈரானிய அரசாங்கத்தினதும் மக்களினதும் நன்றியை தெரிவிப்பதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் பல நகரங்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்ததைத் தொடர்ந்து இந்த யுத்தம் ஆரம்பமானது.
இதற்குப் பதிலடியாக ஈரானும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளைத் தாக்கியது.
எனினும், பாகிஸ்தான் மேற்கொண்ட தீவிர இராஜதந்திர முயற்சிகளின் பலனாக கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி போர்நிறுத்தம் எட்டப்பட்டு, மோதல்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்தன.
