காசா பகுதியில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் திட்டம் இன்னும் கைவிடப்படவில்லை என்பதை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்குள்ள மக்கள் தாங்களாகவே முன்வந்து வெளியேறும் “சுய விருப்ப இடப்பெயர்வு” என்ற கருத்தாக்கத்தை அவர் ஆதரித்துப் பேசியுள்ளார்.
இந்த நடவடிக்கையானது காசாவில் இருந்து மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் இனச்சுத்திகரிப்பு முயற்சி என்று விமர்சகர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றனர்.
மேலும், போரினால் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியில் சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை அமைப்பது குறித்தும் மேற்படி நேர்காணலின்போது நெதன்யாகு மழுப்பலான பதிலையே அளித்துள்ளார்.
இப்பிராந்தியத்தில் ஒருபோதும் பாலஸ்தீன நாடு அமைய இடமில்லை என்ற தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
