போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் (நிர்வாகம்) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (06) கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின்படி, இந்தியாவில் உள்ள சென்னையில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவரின் புகைப்படத்துடன், வேறொரு நபரின் தரவுகளை உள்ளடக்கிய விண்ணப்பத்தை முறையான பரிசோதனையின்றி ஏற்றுக்கொண்டு, வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்க உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் ஆவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குத் தொடர்பான நீதவானின் உத்தரவுக்கமைய பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
