மாத்தறை காணி கொள்வனவு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் இரண்டாவது தடவையாகவும் ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு எதிராக மாத்தறை தலைமை நீதிவான் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
மாத்தறை, எலியகந்த வீதியில் அமைந்துள்ள பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான ஒன்றரை ஏக்கர் தென்னந்தோப்பைக் கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கிலேயே, அவருக்கு எதிராக இந்தப் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகாமையினாலேயே, அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும் நடவடிக்கையை நீதிவான் மேற்கொண்டுள்ளார்.
அத்துடன், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சரின் நான்கு பிணையாளர்களுக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்த தலைமை நீதிவான், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் மேற்படி பிணையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
